Sunday, February 16, 2014

இங்கிலாந்தில் ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரிப்பு

லண்டன்: உலகம் முழுவதும் பெண்கள் பலாத்கார கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஆண்களும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அவர்களும் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்ற விஷயம் பெரிதாக பேசப்படுவதில்லை. இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72 ஆயிரம் சிறுவர்கள், ஆண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இங்கிலாந்து அரசு நேற்றுமுன்தினம் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தில் பலாத்காரம் அல்லது பாலியல் ரீதியான கொடுமைகளால் ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து 

வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ஆண்கள் பலாத்காரத்தால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் அதுபோன்ற சம்பவங்களில் புகார் தெரிவிப்பதில்லை. சமீபத்திய புள்ளிவிவரப்படி, இங்கிலாந்தில் 13 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள 2,164 ஆண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து அமைச்சர் டேமியன் கிரீன் கூறியதாவது:பலாத்காரத்தால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தில் இருந்து வெளிவந்து மற்றவர்களை போல இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரை, கவுன்சலிங், ஆலோசனை வழங்க அந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் பெரும் பாலும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அதுபோன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம். பலாத்கார பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட்டு வாழ ஏற்பாடு செய்யப்படும். பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு உதவ ஏற்கனவே சில தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இன்னும் பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு முன்வர வேண்டும்.மேலும் பலாத்காரத்தால் சிறுவர்கள், ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தண்டனைகளை கடுமையாக்க பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் டேமியன் கிரீன் கூறினார்.

No comments:

Post a Comment