Saturday, April 12, 2014

இயங்கும் இயங்கா கணக்குகள்

வங்கி டெபாஸிட்தாரர்களின் விழிப்புணர்வு மேம்பாட்டு நிதியம் (Depositor Eduction and Awareness Fund) அமைக்கப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட்டுகளை ஒன்று திரட்டி இந்த நிதியம் அமைக்கப்பட்டு, அதன் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர்களில் ஒருவர் தலைமை வகிக்கும் கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். வங்கி டெபாஸிட்தாரர்கள் சார்ந்த நலத்திட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிதியத்திலிருந்து அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted Image

இந்திய வங்கி நிர்வாக கட்டுப்பாடு விதிமுறை பிரிவு 26இன் படி Section 26 of Banking Regulation Act) ஒவ்வொரு வருட முடிவிலும், நிர்வகிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்குகளில், பத்து வருடங்களுக்கு மேல் உரிமை கோரப்படாத டெபாஸிட்டுகளின் விவரங்களைப் பற்றிய அறிக்கையை, இந்திய வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

வருடத்திற்கு வருடம் இம்மாதிரி கணக்குகளின் எண்ணிக்கையும், தொகையும் அதிகரித்து வருவதுதான் ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்புக்கு முக்கிய காரணமாகும்.

சமீபத்திய புள்ளி விவரப்படி, இந்திய வங்கிகளில் உரிமம் கோரப்படாத டெபாஸிட் கணக்குகளின் எண்ணிக்கை 1.33 கோடி. அந்த கணக்குகளில் குவிந்திருக்கும் டெபாஸிட்டுகளின் மொத்த தொகை 3,652 கோடி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (714 கோடி ரூபாய்), கனரா வங்கி (525 கோடி ரூபாய்), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (101 கோடி ரூபாய்) ஆகிய வங்கிகள் இந்த விஷயத்தில் முன்னிலை வகிக்கின்றன.
டெபாஸிட்தாரர்களின் ஒப்புதல் இல்லாமலே அவற்றின் கால வரம்பை (ûT (Maturiy period) நீட்டிக்கும் பழக்கம் சில வங்கிகளியிடையே நிலவி வருகிறது. இதுபோன்ற டெபாஸிட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், உரிமம் கோரப்படாத கணக்குகளின் எண்ணிக்கையும், அதன் கூட்டுத்தொகையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலோட்டமாக பார்க்கும்போது, இது ரிசர்வ் வங்கியின் ஒரு நிதி நிர்வாக மேம்பாடு போல தோன்றினாலும், நம்மில் பலருடைய உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட் பணமும் இந்த நிதியத்தில் சேர வாய்ப்புள்ளதால், இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆர்.பி.ஐ.யின் நடப்பு விதிமுறைகளின்படி, ஒருவருடைய வங்கி கணக்கில் தொடர்ந்து இரு வருடங்கள் பணபரிமாற்றம் எதுவும் நடக்கவில்லையென்றால், அந்த கணக்கு டார்மன்ட் (Dormant Accounts) வகையை சார்ந்ததாக கருதப்படுகிறது. நடப்பு (Current), சேமிப்பு (Savings), காலவரை வைப்பு (Fixed), அயல் நாட்டில் வாழும் இந்தியர்களின் அந்நியச் செலாவணி (NRI Deposits) ஆகிய கணக்குகள் இந்த விதிமுறைக்குள் வரும்.

ஆனால், வங்கிகள் முன்ஜாக்கிரதையாக ஒரு வருடத்திற்கு மேல் இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை (Inoperative Accounts) இயங்கும் கணக்குகளிலிருந்து (Operative Accounts) தனியாக பிரித்தெடுத்து, அவற்றை அதிக கண்காணிப்புகளுக்கு உட்படுத்துகின்றன. கேட்பாரற்ற கணக்குகளில் எளிதாக மோசடிகள் நடக்கக்கூடும் என்பதுதான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணமாகும்.

கணக்கு வைத்திருப்பவர் அல்லது மற்றவர் மூலமாக ஒருவருடைய வங்கி கணக்கில், ஒரு வருடத்தில் ஒரு பண பரிமாற்றம் நடந்திருந்தாலும், அந்த கணக்கு இயங்கும் கணக்காகவே கருதப்படும். ஒருவருடைய காலவரை வைப்புத்தொகைக்கான வட்டித்தொகை, அவருடைய பெயரிலுள்ள நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டால், அந்த கணக்கில் வேறெந்த பண பரிமாற்றம் இல்லையென்றாலும், அது இயங்கும் கணக்காகவே கருதப்படும். ஆனால், சேமிப்பு கணக்கிற்கான வட்டி தொகை அந்த கணக்கில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை சேர்க்கப்படுவது பணபரிமாற்ற நடவடிக்கையாக கருதப்படமாட்டாது.

ஆனால், வேறெந்த பண பரிமாற்றமும் இல்லாமல், வங்கிகளின் கட்டணம் மட்டும் ஒரு கணக்கில் கழிக்கப்பட்டிருந்தால், அந்த கணக்கு, தனியாக பிரிக்கப்பட்டு, இயக்கப்படாத கணக்குகளில் சேர்க்கப்படும்.


Posted Image

இம்மாதிரி பிரிவினைக்குப் பிறகு, டெபாஸிட்தாரர்களுக்கு அதைப்பற்றி எழுத்து மூலம் அறிவிக்கவேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். வங்கிகளிலிருந்து பெறப்படும் கடிதங்களுக்கு நாம் உடனடியாக பதில் அளிக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு மேல், கணக்கு இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களை அந்த பதில் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

வங்கி கிளையின் விலாச மாற்றம், கணக்கு வைத்திருப்பவரின் இருப்பிட மாற்றம், மறதி, வயோதிகம், இறப்பு போன்ற காரணங்கள் இதில் அடங்கும். ஊர் மாறியிருந்தால், அந்த விலாசத்தை தெரிவித்து, அருகிலுள்ள அதே வங்கியின் கிளைக்கு கணக்கை மாற்றித் தர விண்ணப்பிக்கலாம். அயல்நாடு சென்றிருப்பது போன்ற நியாயமான காரணங்களை அளித்தால், வங்கிகள் ஒரு வருட கால அவகாசத்தை இரு வருடங்களாக நீட்டிக்கும் வாய்ப்புள்ளது.

தகவல் பரிமாற்றம் இல்லையென்றால், இந்த காலகட்டத்தில் கணக்கில் பணம் இருந்தாலும் காசோலைகளை சில வங்கிகள் திருப்பி அனுப்பிவிடுகின்றன. இதனால், கணக்கு வைத்திருப்பவருக்கு அவமானமும் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், அவசர தேவைக்கு ஏ.டி.எம். மற்றும் இணையதளம் மூலமாகவும் பண பரிவத்தனை செய்ய முடியாது.

இயக்கப்படாத பிரிவில் சேர்க்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு உரிய வட்டித் தொகையை வங்கிகள் வழங்கவேண்டும் என்பது விதிமுறை. இந்த பிரிவு கணக்குகளுக்கு அதிக கண்காணிப்பு தேவைப்படுவதால் ஒவ்வொரு வங்கியும் நிர்வாக கட்டணங்களை வசூலிக்கின்றன.

இதைத் தவிர, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை கணக்கில் இல்லையென்றால் அதற்கான கட்டணமும் நிலுவை தொகையிலிருந்து கழிக்கப்பட்டுவிடும். எனவே, வங்கி கணக்குகளை இயக்காமல் நீண்ட காலம் விட்டுவிட்டால், அந்த கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி வங்கி கட்டணமாக கரைந்து மறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, உரிமை கோரப்படாத டெபாஸிட்தாரர்களின் பெயர் மற்றும் விலாசங்களை அவர்களுடைய இணையதளத்தில் வங்கிகள் வெளியிட்டு, அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கவேண்டும். வங்கி கணக்குகளை புதுப்பிக்கும் வழிமுறைகளையும் வங்கிகள் தெரிவிக்கவேண்டும்.

இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை புதுப்பிக்க, வாடிக்கையாளர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, சமீபத்திய விலாசத்திற்கான சான்று மற்றும் புகைப்படத்தை (KYC documents) வங்கிக்கு அளிக்கவேண்டும்.

இந்த ஆவணங்கள் மூலமும் கையொப்பம் மூலமும் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு, கணக்கை வங்கி புதுப்பிக்கும். இயக்கப்படாத கணக்கை இயங்கும் கணக்காக மாற்றுவதற்கு, வங்கிகள் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது விதிமுறையாகும்.

பணி புரியும் நிறுவனங்களை மாற்றும்போது, ஊழியர் இன்னொரு வங்கியில் கணக்கு துவங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அம்மாதிரி சமயங்களில், முந்தைய கணக்கு இயக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆகவே, பணிபுரியும் நிறுவனங்களை மாற்றும்போது, முந்தைய வங்கி கணக்கு தேவையில்லை என்றால் அதை முடித்து விடுவதுதான் நல்லது.

ஓய்வு ஊதியம் பெறும் முதியோர் இறந்த பிறகு, வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பித்து, அந்த கணக்கை மூடிவிட வேண்டும். இல்லையென்றால், நிர்வாக செலவுகளை செலுத்தும்படி, வங்கியிலிருந்து வசூல் நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புள்ளது.

நம்முடைய அன்றாட பணபரிவர்த்தனைக்கு தேவையில்லாத வங்கி கணக்குகளை மூடிவிட்டால், நம்முடைய பணம் நம் கையைவிட்டு, ரிசர்வ் வங்கியின் உரிமை கோரப்படாத நிதியத்திற்கு மாறுவதற்கு வாய்ப்பில்லை. சில கணக்குகளை தொடர நேரிட்டால், வருடத்திற்கு ஒரு முறையாவது அக்கணக்குகளில் நூறு ரூபாயை செலுத்துவதற்கு மறக்கக்கூடாது. 

No comments:

Post a Comment