Tuesday, September 9, 2014

இறந்து விட்டதாக கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்தார்

வாணியம்பாடி: வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த ஜப்ருல்லா மனைவி ஷேனாஸ் (54). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்ததாக தெரிகிறது. அவரது இறப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து, நேற்று காலை ஷேனாசின் உடலை அவரது குடும்பத்தினர் வாணியம்பாடி ஜாப்ராபாத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வந்தனர். 

மாலை 5.30 மணியளவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்தது. உடல் மீது உறவினர்கள் தண்ணீர் ஊற்றிய போது, ஷேனாசின் கண்கள் லேசாக அசைந்துள்ளன, உதடுகள் மேலும் கீழுமாக அசைந்துள்ளன. இதனால் பயத்தில் உறவினர்கள் அலறினர். உடனே அவரது குடும்பத்தினர் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டரை, அழைத்து உடலை பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதித்த டாக்டர், ஷேனாஸ் கோமா நிலையில் உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என தெரிவித்துள்ளார். அதன்படி சிறிது நேரத்தில் ஷேனாஸ் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment