Tuesday, September 9, 2014

காசியில் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை

               காசி நகரைச் சுற்றி 45-கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை மற்றும் காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை இதற்க்கு காரணம் என்னாவாயிருக்கும்?  ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். காசியை அடைந்த அனுமன், எங்கும் லிங்கங்களாக காட்சி அளித்ததால் எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். 

பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன், அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கோபித்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். 

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி காசியில் கருடன் பறப்பதில்லை, பல்லி ஒலிப்பதில்லை என கூறுகின்றனர்.

No comments:

Post a Comment